அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள்.
வாழ்க்கை எனும் இந்த ஆழியிலே எமக்குத் துன்பமும் வருவதுண்டு.
இன்பமும் வருவதுண்டு.
ஆனால் நாம் எமக்கு வரும் துன்பத்திலோ அன்றித் துயரத்திலே எமது கவனம் முழுவதையும் செலுத்துவதனால் எமைச் சுற்றி நடக்கும் இன்பமான நிகழ்வுகளைக் கணக்கெடுக்கத் தவறி விடுகிறோம்.
நான் படித்த ஒரு சிறு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.
ஒருநாள் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையினுள் நுழைந்ததுமே
“இன்று ஒரு பரீட்சை வைக்கப்போகிறேன், ஆயத்தமாகுங்கள்" என்றார்.
மாணவர்கள் பரபரப்படைந்தார்கள். வினாத்தாளை கவிழ்த்து வைத்தார்.
மாணவர்கள் வினாத்தாளை திருப்பியதும் ஆச்சரியப்பட்டார்கள் அதிலே ஒரு கேள்வியும் இல்லை; மத்தியில் ஒரு கறுப்புப் புள்ளி மட்டுமே இருந்தது.
மாணவர்களின் மனதில் தோன்றுவதை எழுதும்படி ஆசிரியர் பணித்தார்.
அனைவரும் எழுதியதும் விடைத்தாள்களை வாங்கிப் படித்தார் ஆசிரியர்.
பின்பு அவர் கூறினார்:
"நான் அனைவருடைய விடைத்தாள்களையும் படித்தேன்.
நீங்கள் அனைவரும் அந்தத் தாளின் மத்தியில் இருந்த கறுப்புப் புள்ளியை மட்டுமே கவனித்துள்ளீர்கள்.
அந்தக் கறுப்புப் புள்ளி அந்தத் தாளில் ஒரு சிறிய பகுதியே. ஆனால் அதைச் சுற்றியிருக்கும் மிகப் பரந்த வெள்ளைப் பகுதியை கவனிக்கத் தவறிவிட்டீர்கள்.
நம் வாழ்வும் அதுபோலத்தான் துயரமோ, துன்பமோ அக்கறுப்புப் புள்ளி போல மிகவும் சிறியதே.
நாம் அனைவரும் அச்சிறிய துயரத்தின் மீதே எமது மனதைச் செலுத்துகிறோம்.
அதனால் எமது வாழ்வில் உள்ள மகிழ்ச்சிகரமான தருணங்களை அனுபவிக்காமல் தவறவிடுகிறோம்."
நம் மனம் எதை நோக்கி செல்கிறது என்பதே நம் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கிறது.
ஒரு சிறிய காயம் ஏற்பட்டால் உடலின் முழு நலத்தையும் மறந்து அந்தக் காயத்தையே நினைத்து வலியடைவது போல, ஒரு சிறிய துன்பம் வந்தாலே நம் மனம் முழுவதையும் அதற்குள் அடைத்து விடுகிறோம்.
ஆனால் நம் வாழ்வில் தினமும் நிகழும் சிறிய நன்மைகள், அன்பான வார்த்தைகள், எதிர்பாராத உதவிகள் இவை அனைத்தும் அந்த வெள்ளைப் பகுதியைப் போல நம்மைச் சுற்றியே இருக்கின்றன.
என் இனிய அன்பு உள்ளங்களே!
துன்பமோ, துயரமோ நிகழத்தான் போகிறது.
அதன் அளவிற்கு ஏற்ப அது எமது மனதைத் தாக்கத்தான் போகிறது.
ஆனால் அதை விட்டு வெளியே வர நாம் எமக்கு நடக்கும் அனுகூலமான விடயங்களில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.
ஒரு நொடி நின்று சுவாசத்தை உணருங்கள்.
அந்தச் சுவாசமே நமக்கு இன்னும் வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதைச் சொல்கிறது.
சிறிய நன்றி உணர்வுகள் கூட மனத்தின் இருளை அகற்றும்.
நன்றி சொல்லத் தெரிந்த மனம் துன்பத்தை வெல்லும் சக்தியையும் பெறுகிறது.
வாழ்க்கையை நாம் வாழத்தான் வேண்டும்.
உணர்வுகள் எனும் குதிரைகள் பூட்டிய உடம்பு எனும் இத்தேரில் உட்கார்ந்திருக்கும் சாரதியே நமது புத்தியாகும்.
இந்த மூன்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவர் இப்பூமி எனும் சாலையிலே வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக ஓட்டிச் செல்வார் என்பது சத்தியமான உண்மையாகும்.
உணர்வுகள் ஓடிக்கொண்டே இருக்கும்.
அவற்றை நிறுத்த முடியாது.
ஆனால் அவற்றை வழிநடத்த முடியும்.
குதிரை ஓடுவது தவறு அல்ல கட்டுப்பாடின்றி ஓடுவது தான் ஆபத்து.
அதேபோல், உணர்வுகள் வருவது தவறு அல்ல அவற்றை நம் புத்தி வழிநடத்த வேண்டும்.
ஓட்டப் பந்தயத்தில் முயலும் வெல்லலாம், அதேபோல் ஆமையும் வெல்லலாம்.
ஆனால் எம் வாழ்க்கைப் பந்தயத்தில் முயலாமை வெல்லுமா?
எதையும், எப்போதும், எப்படியும் செய்து முடிக்கலாம் என்பதை இதையாவது இப்போது, இப்படியாவது செய்து முடிப்பதே மேலானது.
நாளை என்பது எப்போதும் கற்பனையானதே.
இன்று என்பதே நிஜமாக எம்முன்னே நிற்கிறது.
எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப்போடும் போது அது கற்பனைக்குத் தள்ளப்படுகிறது.
நாளை நமக்குச் சொந்தமில்லை.
இன்று மட்டுமே நமக்குரியது.
இன்றைய ஒரு சிறிய முன்னேற்றம் கூட நாளைய பெரிய வெற்றிக்கான விதையாகும்.
நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய படியும் நம் எதிர்காலத்தை அமைக்கிறது.
அதனால் இன்று செய்ய வேண்டியது இன்று செய்யப்பட வேண்டும்.
இன்றைய தளத்திற்கு நேற்றைய நிகழ்வுகள் கொடுத்த அனுபவ உரத்தை இட்டாலே நாளைய செழிப்பான வளர்ச்சி உறுதியாகும்.
திடமான எண்ணம், அமைதியான சாத்வீக நடைமுறை —இதன் வழியில் நாளைய உலகின் வெற்றிக்காக இன்றே செயற்படுங்கள்.
உங்களால் முடியும்.
அன்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக