திங்கள், 20 ஏப்ரல், 2026

21.04.2026

அன்பினியோரே !  

இனிய வணக்கம்.

காலில் செருப்பில்லை என்று எண்ணி கவலைப்பட்டுக் கொண்டு நடக்கும்போது எதிரே ஒரு காலிலாத மனிதனைக் கண்டோமானால் எப்படி எம் மனது கொஞ்சம் ஆறுதலடைகிறது?  

ஆமாம், அக்காலிழந்தவனின் துரதிருஷ்டம் எம் மனதுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. 

இதுதான் இயற்கை.  

உலகத்தில் பெரும்பான்மையான மக்களின் மனதின் உணர்வுகள் இவ்வழியே தான் ஓடுகிறது.  

ஒரு மனிதன் எதற்காக ஒரு செயலைச் செய்கிறான் என்பதன் முழு அர்த்தத்தையும் உள்வாங்கிக் கொள்ளாது மேலோட்டமாக அதைத் தமது திறமைக்குச் சாதமாக்கிக் கொண்டு நடக்கும் சுயநலமிக்கவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உலகமே இது.  

இதற்கு விதிவிலக்காக உங்களில் பலர் இருப்பதை நான் அறிவேன்.  

பெரும்பான்மை என்று குறிப்பிடும்போது ஒட்டுமொத்தமாக அனைவரையுமே குறிப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.  

சில நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பார்வை நம்மைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம்.  

நாம் காட்டும் பொறுமையை அவர்கள் பலவீனமாகவும், நாம் காட்டும் அமைதியை அவர்கள் பயமாகவும் எண்ணலாம்.  

ஆனால் உண்மையில், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் திறன் என்பது பலவீனத்தின் அடையாளமல்ல.

அது உள்ளத்தின் வலிமையின் உச்சக்கட்டம்.  

அந்த வலிமை உள்ளவர்களே உலகை மாற்றும் சக்தி கொண்டவர்கள்.

கவியரசர் கண்ணதாசனின் ஒரு படைப்பில் நான் படித்த ஒரு சிறு செய்தியைக் குறிப்பிடுகிறேன்.  

மிகவும் எளிமையாக சுவைமிகு தமிழில் கவியரசர் கூறியதை இன்னும் சுருக்கி இங்கு கூற விழைகிறேன்.  

ஒரு காட்டு வழியாக ஒரு பெண்யானையும், ஆண்யானையும் நடந்து வந்து கொண்டிருந்தன.  

அப்போது அவைகள் நடக்கும் பாதையின் குறுக்காக ஒரு எறும்புக் கூட்டம் ஊர்ந்து செல்வதைக் கண்ட ஆண்யானை அந்த இடத்திலே அடுத்தொரு அடி எடுக்காமல் நின்று விட்டது.  

அதே போல் பெண்யானையும் நின்று விட்டது, அப்போது பெண்யானை ஆண்யானையைப் பார்த்து "ஏன் நின்று விட்டாய்?" என்று கேட்டது.  

அதற்கு ஆண்யானை "நாம் கவனக்குறைவால் பாவம் அந்த எறும்புகளை மிதித்து விடக்கூடாது என்பதற்காக நின்றேன்" என்றது.  

புன்னகைத்த பெண்யானை தானும் அதே காரணத்திற்காகத்தான் நின்றேன் என்றது.  

அப்போது அவ்வெறும்புக் கூட்டத்தின் தலைவன் மற்ற எறும்புகளைப் பார்த்து "பார்த்தீர்களா எமது பலத்தை?  
எமது கூட்டத்தைக் கண்டதும் அந்த யானைகள் பயந்து நின்று விட்டன" என்று கூறியது.  

அவ்வெறும்புக் கூட்டம் தமது பாதையை விட்டகன்றதும் மன அமைதியுடன் அந்த யானைகள் தமது பயணத்தைத் தொடர்ந்தன.  

இது வாழ்க்கையின் ஒரு பெரிய உண்மையை நமக்கு கற்றுத் தருகிறது.  

நாம் செய்யும் நன்மையை எல்லோரும் நன்மையாகவே புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.  

சிலர் தங்கள் குறுகிய பார்வையால் நமது உயர்ந்த எண்ணங்களையே தவறாகப் புரிந்து கொள்வார்கள்.  

ஆனால் அதனால் நமது நன்மை குறையக்கூடாது; நமது மனம் சுருங்கக்கூடாது.

என் இனிய இளைய தலைமுறையே!  

நீங்கள் அன்பின் நிமித்தம் சில சமயங்களில் இக்கட்டான சூழல்களில் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதை சில பலவீனமானவர்கள் தமது பலமாகவும் உங்களின் கோழைத்தனமாகவும் பார்க்கலாம், ஆனால் உண்மை உங்கள் உள்ளத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.  

அதன் ஒளியில் உங்கள் முன்னேற்றப்பாதை மென்மேலும் தெட்டத்தெளிவாகத் தெரியும்.  

உண்மையான வலிமை என்பது சத்தமாகக் கத்துவதிலும், கோபத்தை வெளிப்படுத்துவதிலும் இல்லை.  

அமைதியாக நிற்கும் திறனிலும், உணர்ச்சியை அடக்கும் திறனிலும் தான்.  

உங்களைத் தூண்டுபவர்களை வெல்ல வேண்டிய அவசியமில்லை;  
உங்கள் உள்ளத்தை வெல்லும் திறன் இருந்தால் உலகமே உங்களுக்கு முன் தலைவணங்கும்.

இதோ நான் சமீபத்தில் படித்த ஒரு சிறு சம்பவக்கதை.  

குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.  

அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.  

ஒருநாள் சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர்.  

அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.  

அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.  

அவன் மன்னனிடம், “அரசே… உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்” என்றான்.  

அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது.  

அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள்.  

அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.  

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், “அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்துமாலை பரிசு?” என்று கேட்டார்.  

மன்னனோ, “அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான்.  

அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது.  

உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது” என்று கூறினான்.  

உண்மையான அன்பு எப்போதும் வெளிப்புற வடிவத்தைப் பார்க்காது. 
 
அது உள்ளத்தின் தூய்மையை மட்டுமே உணரும்.  

நாம் கொடுப்பதின் மதிப்பு அதன் விலையிலில்லை.

அதை வழங்கும் மனத்தின் நேர்மையில்தான்.  

அந்த நேர்மை இருந்தால், உலகமே நமக்கு துணையாக நிற்கும்.

நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.  

ஆமாம், உண்மை அன்புக்கு அந்தஸ்து கிடையாது, 

ஆணவம் கிடையாது.  

எனவே துணிவுடன் முன்னேறுங்கள்.  

உங்களால் முடியும்.

அன்பன்  
சக்தி சக்திதாசன்